கட்டுப்பாடுகளுடன் தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி

கோவை மாநகராட்சியில் அரசின் உத்தரவின்படி சாலையோர தள்ளுவண்டி கடைகள் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக வகுத்துள்ள விதிமுறைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையோர தள்ளுவண்டி கடைவியாபாரிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சாலையோர தள்ளுவண்டி கடைகளை காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை மட்டுமே நடத்த வேண்டும்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். அன்றாடம் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கடைகளில் இரண்டு அல்லது மூன்று பணியாளர்களுக்கு மேல் பணியில் அனுமதிக்கக் கூடாது.

கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்ய வேண்டும். சாலையோரத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு குறைந்தது நான்கு மீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சாலையோர தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட அனுமதிக்க கூடாது. பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

கடை உரிமையாளர்கள் முடிந்தவரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் செயல்படும் சாலையோர தள்ளுவண்டி கடைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்.

மேலும், சாலையோர தள்ளுவண்டி கடைகளில் முதியவர்களை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருப்பின் சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்தக் கூடாது. அவ்வாறு அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சென்று காட்ட வேண்டும்.

மாநகராட்சி எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்கள் மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைகள் உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.