குரல் பதிவைக் கொண்டு கொரோனா கண்டறிய முடியும்?

இனி பரிசோதனை செய்து மட்டுமல்லாமல் இருமல் மற்றும் பேசும் போது குரல் பதிவைக் கொண்டும் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க முடியும் என புது வகை ஆய்வினை வெளியிட்டுள்ளார்கள் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐஎஸ்சி) ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆய்வு தொழில்நுட்பத்தை இணையம் அல்லது செல்போன் செயலிகளாக உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்மூலம் கொரோனா வைரஸ் நமக்கு உள்ளதா என வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ள, இருமல் மற்றும் குரல் பதிவை அந்த செயலியில் பதிவு செய்தால், அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் இருமல் மற்றும் பேசும் சத்தத்தினையும், மற்ற நோயால் பாதிப்படைந்திருக்கும் நோயாளிகளின் இருமல் மற்றும் குரல் பதிவையும் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில மாதிரிகளே தற்போது பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் இதை வைத்து எந்த முடிவிற்கும் வர இயலாது எனவும் குறிப்பிடுகின்றனர். மேலும் அதிக மாதிரிகளை பரிசோதிக்க மருத்துவமனைகளின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஐசிஎம்ஆர்-ன் ஒப்புதலைப் பெற விண்ணப்பித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் மார்ச் மாத இறுதியில் இருந்து இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் 7 பேர் கொண்ட குழுவுடன் பெங்களூரு ஐஐஎஸ்சி-யின் எலக்ட்ரிக் என்ஜினியரிங் உதவிப் பேராசிரியர் ஸ்ரீராம் கணபதியும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.