கட்டுப்பாடுகளுடன் இயங்கும் ஆட்டோக்கள்

கோவையில் முகக்கவசம் மற்றும் சானிடைசர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்கள் இன்று முதல் இயங்கி வருகிறது.

சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், இன்று முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டது.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ, ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்கும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை, எனவும் அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் உக்கடம், சாய்பாபாகாலனி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள ஆட்டோக்கள் பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிடைசர்களை ஓட்டுநர்கள் வைத்து கொண்டு, வரும் பயணிகளுக்கு வழங்கி, முகக்கவசம் போன்ற முக்கிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.

மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றினை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தியும் வருகின்றனர்.கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தருமாறு ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.