வேகமெடுக்கும் தடுப்பூசி ஆய்வு

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து, 3 லட்சம் பேரை பலி கொண்டுள்ள இந்த தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிக்கும்

முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரிட்டன் அரசு இதற்காக மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் தாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி சோதித்துப் பார்த்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் பாதகமான விளைவுகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பூசி தடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட 6 குரங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில், அந்த குரங்குகள் முழுமையாக குணமடைந்தது தெரியவந்துள்ளது. அவற்றுக்கு தடுப்பூசியால் எந்த பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்கப்பட உள்ளது. இதன் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று லண்டன் கிங் கல்லூரியின் மருந்து மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி துறை பேராசிரியை சாரா கில்பர்ட் கூறும்போது, “தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். சோதனைகள் வெற்றி பெற்று விட்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பேருக்கு செலுத்தத்தக்க அளவு தடுப்பூசி மருந்தினை உற்பத்தி செய்து விடலாம் என்றும் கூறுகின்றனர். இங்கிலாந்தில் மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பார்க்கப்படுகிற சோதனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.