தேசிய தொழில்நுட்ப தினம்

இந்திய மக்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொருவரும் இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படும் விதமாகவும், தேசிய தொழில் நுட்பத் தினம் மே 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும்  புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இந்திய இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

1998  மே 11 மற்றும் 13 ஆகிய தினங்களில் ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. இதன் மூலம் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில், ஆறாவது நாடாக இந்தியா இணைந்தது. இந்த சாதனையை அங்கீகரிக்க இந்த நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும், உள்நாட்டுத் தயாரிப்பில் உருவான அதிநவீன ஏவுகணைகளான திரிசூல் ஏவுகணை, ஹன்சா- -3 விமானம், கண்டம் விட்டு கண்டம் பாயும் (5,000 கி.மீ., சுற்றளவு) அக்னி-5 ஏவுகணை, இஸ்ரோவின் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், உள்நாட்டுத் தயாரிப்பில் உருவான ‘கிரையோஜெனிக்’ இன்ஜின், நிலவை ஆராய ‘சந்திராயன்’, செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் ஆகியவை இந்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் முக்கிய சாதனைகள். ககன்யான், ஆதித்யா திட்டம் போன்ற வருங்காலத் திட்டங்களும் இதில் அடங்கும்.

விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் இந்தியா மேலும் சிறப்பாக முன்னேற இளைஞர்கள் பாடுபட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.

மேலும், அறிவியல் துறையில் சாதனை செய்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இத்தினத்தில் விருதுகள் வழங்கப்படுகின்றன.