நம்பிக்கையுடன் இருங்கள்…

ஒரு கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்….

ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஆனால் ஊரில் யாருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை.
முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு.. ”இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும்” என்று.
இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்புக் கேட்டனர்.
‘சாபத்திற்கு விமோசனம் கிடையாது’ என்று கூறிவிட்டார் முனிவர்.

வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.
மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் (பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்று தூரத்தில் வைத்து விட்டான் பரந்தாமன்.
அப்போது அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது. ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டு இருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.
மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்குப் போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு.
ஒருநாள் அவர்களும் அவனிடம் கேட்டே விட்டனர். ‘நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா?’ என்று.. அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம்.

‘‘50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும்.. அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான்.
இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கும் கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார். “50 வருசம் சங்கு ஊதாமல் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே” என்று நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார்..
பிறகு என்ன.. இடி இடித்தது. மழை பெய்ய ஆரம்பித்தது.. நம்பிக்கை ஜெயித்து விட்டது..
“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்”
கொரோனாவால் நாம் தொலைந்தோம் என்று அவநம்பிக்கை கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் இருங்கள்.. தனித்திருங்கள். என்றும் தன்னம்பிக்கை தோற்காது. ஏதோ ஒரு வேலையை செய்துகொண்டே இருங்கள். வீட்டு வேலை, தோட்ட வேலை, பிள்ளைகளுடன் விளையாட்டு, பெற்றோருடன் உறவாடுதல், நண்பர்களுடன் அளவளாவுதல், புத்தகம் வாசித்தல் என ஏதோ ஒரு வேலை செய்துகொண்டே இருங்கள். காலம் மாறும். களம் மாறும். காட்சிகள் மாறும். நம்பிக்கையுடன் இருங்கள்.. நல்லது நடக்கும்.

பூந்தமிழன்