இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கோவை மாநகராட்சி நிர்வாகம் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் மேற்கொண்டது.

கோவையில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஓரு பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் துவங்கியுள்ளது. சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா அறிகுறிகளுடன் 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர 292 பேர் வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான ஸ்கைவாக் ரோபடிக் நிறுவனம் சார்பாக மாநகராட்சியுடன் இணைந்து டிரோன் மூலம் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளானது இன்று நடைபெற்றது. கோவை மாநகரில் இந்த பணியானது அடுத்த 20 நாட்களுக்கு தொடர இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்படும் நபர்கள் வசித்த பகுதிகளில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட இருப்பதாகவும் தனியார் நிறுவனத்தினர் தெரிவித்தனர். கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டிரோன் 5 லிட்டர் எடையில் கிருமிநாசினியை சுமந்தபடி 50 மீட்டர் உயரமும் 2 கிலோமீட்டர் தூரமும் செல்லக்கூடியது என்பது குறிப்பிடதக்கது.