சீனாவில் புதிய வைரஸ்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலகமே அதிர்வலையில் மிதந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் ஹண்டா எனும் நோயின் பாதிப்பினால் ஒருவர் இறந்துள்ளதார் என்பது நம்மை இன்னும் பயத்திற்கு உள்ளாக்குகிறது.
சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், அங்கு ஹண்டா வைரஸ் பரவி வருகிறது. யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் இறந்தார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. ஹண்டா வைரஸானது எலி, பெருச்சாளி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. கொரோனா உள்ளிட்ட மற்ற வைரஸ்களைப் போல மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பது ஆறுதல் தரும் செய்தி.

இந்த வகை வைரஸ்கள் வெகு சீக்கிரத்தில் யாரையும் தாக்காது. ஆனால், தாக்கினால், உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், நோயாளிகள் இறக்கும் அபாயம் உள்ளது. அதிக அளவில் இந்த வைரஸ்கள் இன்னும் பரவவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற எலி வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜைகளில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும். நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும். இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, ‘ஹண்டா வைரஸ்’ தொற்றும். சுவாச மண்டலத்தைத்தான் இது முதலில் பாதிக்கும். தொடர்ந்து மர்ம காய்ச்சல், ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் பாதிப்பு என தொற்றுக்களை ஏற்படுத்தும். இது உயிரிழப்பு வரை செல்லக்கூடும்.

தகவல் : நியூஸ் 18 தமிழ்
https://bit.ly/39hihQU