14 வயது பள்ளி மாணவன் 6 பேருக்கு  மறுவாழ்வு அளித்தார்!

ஈரோடு மாவட்டம், வைரமங்கலம், சிறைமீட்டான்பாளையத்தை சேர்ந்த ராஜா மற்றும் சக்தி அவர்களின் மகன் மாஸ்டர் அகிலேஷ், வயது 14, இவர்  அந்தியூரில் ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார் இவர் 09.01.2020 தேதி அன்று பவானியில்  இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தார் அப்பொழுது தாராபுரம் அருகே மாலை 4.45 மணிக்கு அந்த சாலை வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக முதலுதவிக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை, அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித  முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 11.01.2020ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் ராஜா மற்றும் சக்தி அவர்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார்கள். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இருதய வால்வு, கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள், ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள்  கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், கண்கள், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இருதய வால்வு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிச்சாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  உடல் உறுப்பு தானம் வழங்கிய மாஸ்டர் அகிலேஷ் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறினார்.