அறிவைக் கொண்டு இறைவனை அறிய இயலாது

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்றுவரும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஏழாவது நாளான இன்று (07-01-2020) அரங்கராமலிங்கம் ‘தாயுமானவர்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இவர் பேசுகையில், தொண்டு செய்கிறவனை நோக்கி இறைவன் தேடி ஓடி வருகிறான். எங்கும் எதிலும் தன்னை முன்னிறுத்தாமல், காணாமல் ஆக்குவது தாயுமானவரின் இறை நோக்கு. வேதாரண்யத்தில் கேடிலியப்பர் பிள்ளைக்கு மகனாக பிறந்தார். கேடிலியப்பர் மன்னரின் கணக்காளராக பணியாற்றினார். திருச்சிக்கு இடம்பெயர்ந்த தாயுமானவர் தனக்கு முன்பிருந்த ஞானிகள் வேதங்கள் உபநிடதங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். தந்தையுடைய ஓய்விற்குப் பிறகு அரச கணக்காளர் பதவியை ஏற்று பணிபுரிந்தார். சில நாட்களில் லெளகீகத்தில் விலகி, மௌனகுரு என்னும் ஞானியிடம் தீட்சை பெற்று துறவறம் பூண்டார்.

கடையனுக்கும் கடைத்தேற்றம் எனும் வகையில் எல்லோருக்கும் புரியும்படி ஒன்றே முக்கால் அடியில் கண்ணிகளை எழுதினார். அப்படி இவர் எழுதிய பராபரகண்ணி செய்யுள்கள் இன்றும் தன் புகழ் குறையாமல் நீடித்து நிற்கிறது. தாயுமானவர் எழுதிய பாடல்களில் 1452 பாடல்கள்தான் நமக்கு கிடைத்திருக்கின்றன.

படிப்பு ஞானம் லெளகீக விவேகம் எதுவுமே பலன் தராது. தாயுமானவர் இளமையில் ஞான யோகம் உயர்ந்ததா, கர்ம யோகம் உயர்ந்ததா எனும் தர்க்கத்தில் தன்னோடு விவாதிக்க வருபவர்களை வெல்வது உண்டு. ஆனால், ஒரு கட்டத்தில் இந்த அறிவினால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார். நூலினால் ஏணி கட்டி வாழ முடியாது. அதுபோல அறிவினாலே மெய்ஞானத்தை சென்றடைய முடியாது. அறியும், தோறும் ஆணவம் பெறுகுகிறது. அறிவை வைத்துப் பார்த்தால் இறைவன் புலப்பட மாட்டார். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வருமோ என லோகாயுதங்களில் தீவிரமாக ஈடுபடுபவர்களை தாயுமானவர் எச்சரிக்கிறார். தாயுமானவர் சைவ நெறியில் துவங்கி சித்தர் நெறியை அடைந்து ஞானியாக யோகநெறியில் கலந்தவர். நமது ஞான மரபில் மெய்யியல் பாடல்கள் வழி அழியாத புகழ் பெற்றவர் என்றார்.