1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் திட்டம்

குஜராத்திலிருந்து டெல்லி-ஹரியானா எல்லை வரை 1,400 கி.மீ நீளம் மற்றும் 5 கி.மீ அகலமுள்ள பசுமை மண்டலத்தை உருவாக்கும் ஒரு லட்சியத் திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் மொத்த பரப்பளவில் 50%க்கும் அதிகமான நிலம் சீரழிந்து உள்ளதாகவும், பாலைவன நிலமாக மாறக்கூடிய நிலையில் இருப்பதாக செயற்கைகோள் தகவல்களின் அடிப்படையில் இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இதனை தடுக்கும் விதமாக செயல்படுத்தப்பட உள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள இந்த திட்டமானது, அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்பட்டால் நிலம் சீரழிவு மற்றும் தார் பாலைவனம் கிழக்கு நோக்கி விரிவடைந்து வருவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

போர்பந்தரில் இருந்து பானிபட் வரை குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரந்து விரிந்துள்ள ஆரவல்லி மலைத்தொடரில் காடுகள் அழிப்பினால் சீரழிந்த நிலங்களை மீட்டெடுக்கவும், மேற்கு பாலைவனங்களில் இருந்து வரும் மணல் புயல்களை தடுக்கும் அரணாகவும் அமையும் இந்த பசுமை மண்டலம்.

Sourced