தென்மண்டல ஹாக்கி போட்டி நிறைவு

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான மூன்று நாட்கள் நடைபெற்ற தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டி நிறைவு பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சூழல் கோப்பைகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.

இப்போட்டியில் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற தென் மாநிலங்களைச் சேர்ந்த 36க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நாக்கவுட் முறையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி போட்டிகள் நடைபெற்றன. இதில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியும் ஊட்டி லாரண்ஸ் பள்ளியும் தகுதி பெற்று மோதின. விருவிருப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சச்சிதானந்தா பள்ளி முதலிடமும் ஊட்டி லாரன்ஸ் இரண்டாம் இடத்தையும் பெற்றது.

இதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி முதலிடத்தையும் நெய்வேலி ஜவகர்லால் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றனர்.மேலும், 19 வயதுக்குட்பட்ட ஹாக்கி போட்டியில் ஊட்டி லாரன்ஸ் பள்ளி முதலிடத்தையும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

இதேபோல், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சென்னை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி முதலிடத்தையும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அர்ஜுன் ஹாலப்பா பள்ளி செயலாளர் கவிதாசன் ஆகியோர் சுழல் கோப்பைகளும் கேடயங்களும் வழங்கி பாராட்டினர்.