புவிசார் குறியீடு பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

பால்கோவா என்றாலே அது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தான். இதன் சுவை போன்று வேறு எங்கும் கிடைக்காது. அவ்வளவு சுவையாகவும், திகட்டாமலும் இருக்கும். இங்கு பால்கோவா மட்டுமின்றி பால்அல்வா, பால்பேடா, பால்கேக், கேரட் பால்கோவா மற்றும் பியூர்கோவா என பல வகையில் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், சுமார் 80 ஆண்டுகளாக இப்பகுதியில் தனித்துவத்துடன் தயாரிக்கப்படும் பால்கோவாவிற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு ஏதும் இல்லாததால், புவிசார் குறியீடு விரைவில் அளிக்கப்படும் என புவிசார் குறியீடுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 31 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் 32வது பொருளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை வேறு பகுதிகளை சேர்ந்த யாரும் கூறி விற்பனை செய்ய முடியாது என்பதுடன், சர்வதேச அளவில் தனி அங்கீகாரம் கிடைக்கும்.