மதுக்கரையில் தாலுகா நீதிமன்றம் திறக்கப்பட்டது

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றத்தை இன்று மாலை திறந்து வைத்த  மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், இந்த பகுதிக்கு உட்பட்ட வழக்குகள் அனைத்தும் இனி இங்கு நடைபெறும் என தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாலுகா நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்த நீதிமன்ற திறப்பு விழாவில் உள்ளாட்சி துறை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் கோவை நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் நீதிபதிகளும், அமைச்சரும் நீதிமன்றத்தை பார்வையிட்டனர்.பின்னர் பேட்டியளித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல், 2012 ல் தாலுகா அளவில் நீதிமன்றங்கள்  அமைக்கப்படும் என அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்திரவிட்டதாகவும்,அதன் அடிப்படையில் மதுக்கரையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தற்போது திறக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வட்டத்தில் உள்ள சிவில், கிரிமினல் வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு  மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். இதனைதொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலத்தில் மொத்தம் 1140 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன எனவும், நடப்பு பட்ஜெட்டில் நீதித்துறைக்காக 1265 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். நீதிமன்றங்களுக்கான புதிய கட்டிடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக கூறிய அவர் பணியின் போது உயிரிழக்கும் வழகறிஞர்களின் சேமநல நிதியும் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து வட்டங்கள் தோறும் நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.