‘என்னை சுமந்த தாயும், மனதில் சுமந்த தந்தையுமே சிறந்தவர்கள்’

தமிழ் நாட்டில் அனாதை ஆஸ்ரமம் போல் முதியோர் இல்லமும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் குடும்பத்தினரால் கைவிடபட்ட முதியவர்கள் கையேந்தும் நிலை இன்றும் இருக்கிறது.

ஆனால் வேலூரின் சலவன்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் தனது தந்தை வெள்ளை நாயக்கர் மற்றும் தாய் ஜெகதாம்மாள் தன்னை வறுமை தெரியாமல் வளர்த்தது தான் இன்று சொகுசாக இருப்பதற்கு காரணம் என்பதாலும், அப்பா – அம்மாவின் தன்னலமற்ற பாசம் காரணமாகவும் அவர்களின் மேல் அதிக பாசம் வைத்துள்ளார்.

ஆனால் இவரது தாய், தந்தையர் இருவரும் 2008-ஆம் ஆண்டிற்குள் இறந்துவிட, அவர்களின் சமாதியைச் சுற்றி 37 லட்சம் ரூபாய் செலவில் கோவில் ஒன்றை எழுப்பி, அதில் அவர்கள் நிற்பது போன்ற சிலைகளை வடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ‘என்னை சுமந்த தாயும், மனதில் சுமந்த தந்தையுமே சிறந்தவர்கள்’, ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை… தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’  உள்ளிட்ட பெற்றோரைப் புகழும் பொன்மொழிகளையும் இக்கோயிலினுள் பொறிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும், அப்பா-அம்மா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு வேட்டி சட்டைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

தற்பொழுது ராமச்சந்திரனும் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். உடலும் இந்த அப்பா, அம்மா கோயிலிலேயே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தன்னைப் போலவே இந்த கோவிலை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் பெற்றோரை மதிக்க இந்த கோயில் கற்றுத்தர வேண்டும் என்றும் தம் பிள்ளைகளிடம் கூறியுள்ளார்.

இவரை போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் முதியவர் இல்லம் இருக்காது அதற்கு பதில் கோவில் மட்டுமே இருக்கும் தாய் தந்தையருக்காக.