ஆசிரியர் தகுதி தேர்வு தொடங்கியது (டெட்)

மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

அதேபோல், 23.8.2010க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ந்தேதி முதல் கடந்த ஏப்ரல் 12ந்தேதி வரை இணையதளம் மூலம் மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த மே மாதம் 26ந்தேதி வெளியிடப்பட்டன.

இவர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.  இன்று முதல் தாள் தேர்வும், நாளை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற முதல் தாள் தேர்வையும், 8ம் வகுப்பு வரை பணியாற்ற 2ம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. சென்னையில் 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், தமிழகம் முழுவதும் டெட் தேர்வு தொடங்கியுள்ளது.