வெடிச்சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்!

துக்ளக் தர்பாரில் அரசியல் தோரணம்

இதழாளர் சோ அவர்களின் கைவண்ணத்தில் உருவான துக்ளக் தர்பார் என்கின்ற அரசியல் நையாண்டி நாடகம் மிகவும் புகழ் பெற்றது. அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் இடம்பெற்று வந்த மாற்றங்களை சமகால நிலவரத்தை பகடி செய்து துக்ளக் இதழின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த சத்யா எழுதி இயக்கிய துக்ளக் தர்பார் எனும் நாடகம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது. கடந்த ஞாயிறு மே 19 அன்று, கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் துக்ளக் தர்பார் நாடகம் நடைபெற்றது.

சென்னை யுனைடெட் விஷூவல்ஸ் டிவி வரதராஜன் குழுவினர் இந்த நாடகத்தை 60 ஆவது முறையாக கோவையில் அரங்கேற்றினார்.  சொர்க்கத்தில் நாரதர் சோவை சந்தித்து உரையாடும் காட்சியில் நாடகம் துவங்குகிறது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரத்தில் நல்லவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக முகமது பின் துக்ளக் கையும் அவரது அமைச்சர் பதூதாவையும் பூலோகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர் நாரதரும் ஷோவும். எதிர்க்கட்சித் தலைவர் மங்காத்தாவிடமும், ஆளும் கட்சி முதல்வரிடமும் தேர்தலில் நல்லவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி வைக்கும்படி அவர்களிடம் கோரிக்கை வைக்கிறார் துக்ளக்.

இருவரும் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை என்பதால் ஒரு தொலைக்காட்சி செய்தியாளரின் உதவியுடன் இரு தரப்பு எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ரிசார்ட்டில் அடைத்து வைக்கிறார். பின்பு பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தமிழகத்தின் முதல்வர் ஆகிறார் துக்ளக். அதற்குப் பிறகு அவர் உருவாக்கிய சட்டங்கள் அவருடைய அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வந்தது என்பதை மிக மிக சுவாரஸ்சியமான காட்சி அமைப்புகளில் நகைச்சுவையான வசனங்களில் மிகச் சிறப்பாக மேடையேற்றினர் டிவி வரதராஜன் குழுவினர்.

குறிப்பாக மங்கம்மாவாக வரும் எதிர்க்கட்சித் தலைவர், சமீபத்தில் அரசியலுக்கு வந்த திரைப்பட நடிகராக வரும் சங்கர், ஆளுங்கட்சி முதல்வர் முதல்வரின் பொதுச்செயலாளராக வருகின்ற நடிகர் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த நாடகத்தில் இடையிடையே சோ தோன்றும் காட்சிகள் இடம் பிடிக்கின்றன. அதற்காக மறைந்த சோவைப் போன்றே தோற்றமளிக்கக்கூடிய நடித்த கதாபாத்திரம் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. தேர்தலில் இடப் பங்கீட்டு பேரங்கள், கூட்டணிகள், அரசியல் கட்சிகளின் வசனங்கள், சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒருவருக்கொருவர் குழி பறித்துக் கொள்வது, போன்ற சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளை நையாண்டி செய்தது பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.  நவீன நாடகங்களுக்கே உரிய முறையில் நவீன தொழில்நுட்பங்களான அனைத்தும் அரங்கத்தில் புகுத்தப்பட்டு இருந்தது. நாடகத்தை தொய்வில்லாமல் பார்வையாளர்களை ரசிக்க செய்தது. துக்ளக் இதழின் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான சத்யா தனது அங்கமாகும் சமூக விமர்சனம் அரசியல் விமர்சனமும் கலந்த சாட்டையடி வசனங்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் கரகோஷம் எழுந்தது. குறிப்பாக சங்கர் கதாபாத்திரம் அதன் வசனங்கள் மிகச் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருந்தன. நாடகத்திற்கு அரங்கத்திற்கு உள்ளும் வெளியுமாக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.

தேர்தல் பிரச்சாரங்கள் ஒய்ந்து, வாக்குப்பதிவு முடிந்த ஒரு சூழல் என்பதால் அரசியல் நையாண்டி நாடகத்திற்கு பெரிய வரவேற்பு நிலவியதை காணமுடிந்தது. மத்திய வயதை கடந்த பெரியவர்கள், குடும்பத்தலைவிகள், இளம் தலைமுறையினரும் பெருமளவில் வந்து  நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.